ரஷ்யாவில் தொடங்கவுள்ள உள்நாட்டு போர்? - ராணுவத்திற்கு எதிராக திரும்பிய முக்கிய கூலிப்படை!
ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக தற்போது அந்நாட்டின் முக்கிய கூலிப்படை திரும்பியுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடந்து வந்தது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட மிக முக்கியமான கூலிப்படை எவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான வாக்னரின் கூலிப்படை.
தற்போது இந்த கூலிப்படை ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. பல மாதங்களாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் மோதலில் ஈடுபட்டு வந்த வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கூலிப்படை
இதனை தொடர்ந்து, அந்த ஆடியோவில் அவர் நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ராணுவ தலைமைக்கு எதிரான போராட்டத்தில், வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் உள்நாட்டு போர் நடக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மீது குற்றவியல் நடவடிக்கையை ரஷிய அரசு தொடங்கி உள்ளது.
ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிரிகோசின் மீது பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.