பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், இன்று நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயர சம்பவத்தில் மரணமடைந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வெடி விபத்தில் 36 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வருத்தமடைந்தேன். அவர்கள் அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடைக்காலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.