விருதுநகர் அருகே பயங்கரம்- முன்விரோதம் காரணமாக அரசு நடத்துநர் வெட்டிக் கொலை
விருதுநகர் மாவட்டம் அருகே குடிபோதையில் மின் இணைப்பு சம்பந்தமாக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடத்துநர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகரைச் சேர்ந்தவர் சந்தன மகாலிங்கம் (36).
இவர் சாத்தூர் பணிமனையில் அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துநராக பணியாற்றி வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது அவரது வீட்டின் அருகே சென்ற மின்வயர் வெட்டப்பட்டு அருகில் இருந்த 3 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏற்கெனவே இருந்த முன்பகையால் நடத்துநர்தான் மின்இணைப்பை துண்டித்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் குணசேகரன் (அண்ணன் தம்பி) ஆகிய இருவரும், சந்தன மகாலிங்கத்தை அருகில் உள்ள காட்டுக்குள் வா யார் பெரியவர் என்று மோதிக் கொள்வோம் என்று அழைத்துள்ளனர்.

இதனையடுத்து, அருகில் உள்ள சோள காட்டிற்குள் சந்தனமகாலிங்கம் கட்டையுடன் சென்றிருக்கிறார். அங்கு அரிவாளுடன் இருந்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சந்தனமகாலிங்கத்தை சராமரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சகோதரர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். சாதாரணமான வாய் வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்துள்ள சம்பவம் அக்கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.