ரஜத் படிதார் தான் அணிக்கு தேவை ; அவரை போல கோலி ஆடவில்லை - விளாசிய ஜாம்பவான்!
விராட் கோலி ஆடிய ஆட்டத்தை பார்த்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
கோலி ஆடவில்லை
நடப்பாண்டின் ஐபிஎல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
ஃபாப் டுபிலேசிஸ் - விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டுபிலேசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி தனது முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அசத்தினார்.
முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. பிறகு வந்த ரஜத் படிதார் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார்.அதே சமயத்தில் கோலியின் ஆட்டம் சற்று தேய தொடங்கியது.
முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்த கோலி, அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிக டாட் பால் மற்றும் ஒற்றை ரன்களாக எடுத்தார். அதுவரை விராட் கோலியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கவாஸ்கர் இம்முறை கோலி மீதே பொங்கி எழுந்தார்.
விளாசிய ஜாம்பவான்
இது குறித்து அவர் பேசிய பேட்டியில், "கோலியிடம் இருந்து வெறும் சிங்கிள், சிங்கிள் மற்றும் சிங்கிள் மட்டுமே கிடைத்தன. அடுத்து தினேஷ் கார்த்திக், மஹிபால் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசையில் இருக்கும் நிலையில் கோலி முயற்சி செய்து சில அபாயமான ஷாட்களை அடித்து இருக்க வேண்டும்.
ரஜத் படிதாரை பாருங்கள். அவர் ஒரு ஓவரில் ஏற்கனவே மூன்று சிக்ஸர்களை அடித்து விட்டார். ஆனாலும், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இருக்கலாம் அல்லது வைடாக சென்ற பந்தை அடிக்காமல் விட்டு இருக்கலாம். ஆனால், அங்கு பவுண்டரி அடிக்கும் வாய்ப்பு இருந்ததால் அவர் அதற்கு முயற்சி செய்தார்." என்று கூறினார்.
தொடர்ந்து, "ரஜத் படிதார் ஆடியது போன்ற ஒரு ஆட்டம் தான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி நிறைய பந்துகளை அடிக்க முடியாமல் தவற விட்டார். நீங்கள் உங்களை சுருக்கிக் கொண்ட பின் பேட்டிங் செய்வது எளிதல்ல. எளிதான பந்துகளை மட்டுமே நீங்கள் அடிக்க முயற்சி செய்வீர்கள்.
திடீரென சில பந்துகளை அடிக்க நினைத்தால் சரியாக அடிக்க முடியாது. ஆனால், கோலி அதைத் தான் செய்ய வேண்டும். அவர் பெரிய ஷாட்களை அடிக்க முயற்சி செய்ய வேண்டும்" என்று அதிருப்தி தெரிவித்தார்.