1000 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த விராட் கோலி - தன் மனைவிக்கு சமர்ப்பிப்பதாக உருக்கம்
தான் அடித்த சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் தனது மகளிற்கு சமர்பிப்பதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 122* ரன்களும், கே.எல் ராகுல் 62 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமாரின் மிரட்டல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இப்ராஹிம் ஜார்டன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட் கோலிக்கு இது 71வது சதமாகும், கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு விராட் கோலி இன்றைய போட்டியில் தான் சதம் அடித்துள்ளார்.
இந்தநிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்தது குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய விராட் கோலி, தனது இந்த சதத்தை மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வமிகா ஆகியோருக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், “கடந்த இரண்டரை வருடங்களில் நான் கற்றுக்கொண்ட மிக அதிகம். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் மனைவி அனுஷ்கா சர்மா தான் முழுமையான காரணம்.
எனது இந்த சதத்தை அனுஷ்கா சர்மாவிற்கும் எனது மகள் வமிகாவிற்கும் சமர்பிக்கிறேன். அனுஷ்கா சர்மா எப்பொழுதும் எனக்கு ஆதரவாகவே இருக்கிறார், அவரது ஆதரவால் தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.
6 வாரங்கள் ஓய்வு எடுத்தது எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது, அந்த ஓய்வே நான் எனது விளையாட்டை ரசித்து விளையாடுவதற்கு உதவியாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.