இருகரம் கூப்பி வாக்கு சேகரித்த விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, அவருக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், விஜயகாந்த் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கூறப்பட்டது. இதன்படி இன்று கும்மிடிப்பூண்டியில் தங்கள் கட்சியின் வேட்பாளரான டில்லியை ஆதரித்து இருகரம் கூப்பி விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இதனையடுத்து சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.