5 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திப்பு - பனையூரில் குவியும் ரசிகர்கள்!
விஜய் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால், நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை, தயாரிப்பாளர் சங்கம் வற்புறுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
ரசிகர்கள் சந்திப்பு
மேலும், நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொள்ள உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார் என்று வெளியான செய்தியை அறிந்து ரசிகர்கள் பனையூரில் குவிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாதத்திற்கு ஒரு முறை ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.