2வது சீசனிலேயே கப்பை தட்டிய ஆர்சிபி - விஜய் மல்லையா சொன்னதை பாத்தீங்களா?
ஆர்சிபி வெற்றி குறித்து விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.
ஆர்சிபி வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால், பெங்களூர் அணி வீராங்கனைகள் சிறப்பான பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி தடுமாறியது.
இதனால் 18.3 ஓவர்களில் ஆல் அவுட்டான டெல்லி, 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. இதில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விஜய் மல்லையா பாராட்டு
இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா அவரது எக்ஸ் தளத்தில்,
'நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி ஒரு அதிசயத்தை செய்துள்ளது. இதே போல இந்த ஆண்டு ஆண்கள் அணியும் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டம் அடிக்கும் என எதிர்பார்க்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.