7 மணி நேரம் தாமதமாக வந்தார் விஜய்; அதுதான் காரணமே.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
கூட்ட நெரிசலில் 41 பேர் பலி தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
கூட்ட நெரிசல்
சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் துயரச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துப் பேசினார்.அப்போது அவர்,
"கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் போலீசார் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் தவெக செய்யவில்லை.
முதல்வர் விளக்கம்
கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர். கரூர் பரப்புரையின்போது ஜெனரேட்டர் இருந்த தகரக்கொட்டகைக்குள் கூட்டம் புகுந்தது. மின்சாரம் தாக்குவதை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை நிறுத்தியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நட்டதுள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. தவெக தலைவர் சுமார் 7 மணி நேரம் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார்" என தெரிவித்துள்ளார்.