109 சமுதாய மக்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ்!! கடுமையாக தாக்கிய டிடிவி தினகரன்!!
தேவர் குருபூஜையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவுள்ள நிலையில், அதனை அமமுகவின் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டிடிவி செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசும் போது, 2 ஆண்டுகளாக தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி போகவில்லை என்று கூறி, காரணம் 2021 தேர்தலின் போது, இனி ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, வட தமிழகத்தினரை ஏமாற்றுவதற்காக வன்னியர் குடி மக்களை ஏமாற்றுவதற்காக 10.5% உள் இடஒதுக்கீடு என அறிவித்திருந்தார் என்றார்.
அது நீதிமன்றத்துக்கு போனால் நிற்காது என்பதை தெரிந்துமே அதனை எடப்பாடி செய்தார் என குற்றம்சாட்டிய டிடிவி தினகரன்,4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது செய்யாமல், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க போகிற நேரத்தில் 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்தார் என்று கூறி, அது வன்னியர்களை ஏமாற்ற மேற்கொண்ட நடவடிக்கை என சாடினார்.
109 சமுதாய மக்களுக்கு துரோகம்
தொடர்ந்து பேசிய அவர், கிட்டத்தட்ட 109 சமுதாய மக்களை உள் இடஒதுக்கீடு பாதிக்கும் என்ற அச்சத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறினார்கள் என்று தெரிவித்து, இன்றைக்கு வட தமிழகத்திலும் ஏமாற்றுகிற வேலையை செய்கிறார் என சாடினார்.
தென் தமிழகத்தில் வாழும் 109 சமுதாய மக்களை ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இது இபிஎஸ் செய்த தில்லு முல்லு மக்களை வெகுண்டெழ செய்தது என்று சுட்டிக்காட்டி, அதான் காரணம் என்று கூறி அவர் செய்த மிகப் பெரிய பொலிட்டிக்கல் பிளண்டர் என்றார்.
ஏற்கனவே துரோக சிந்தனை கொண்ட அவர் ஒரு கண்ணில் வெண்ணெயையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்ததுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவுக்கு காரணம் என்று கூறி இதற்கு பயந்து கொண்டுதான் 2 ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்றார்.
மேலும், லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால் இப்போது தென் மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார் என்ற டிடிவி, வருகின்றன லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார் என்று தெரிவித்தார்.