இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!! திமுகவை வசைபாடும் ஜெயக்குமார்
நீட் விவகாரம் தொடர்பாக திமுக கையெழுத்தி இயக்கம் துவங்கி வைக்க, அதனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நீட் கையெழுத்து இயக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பதை முன்வைத்து நேற்று ஆளும் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.
அதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கையெழுத்திட்டு துவங்க, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விழாவில் பங்கேற்று தனது கையெழுத்தை இட்ட பிறகு, விழாவில் பேசிய போது இந்த இயக்கத்திற்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஜெயக்குமார் அறிக்கை
இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நீட் நுழைவுத் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவேன் என்று வாய் வீரம் காட்டிய இன்றைய முதலமைச்சரும், அவருடைய வாரிசும் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 29 மாதங்களில் நீட்டை ஒழிப்பதற்காகப் போடவேண்டிய கையெழுத்தை எப்படி போடுவது என்பதை மறந்துவிட்டார்களோ என்று தமிழக மக்களும், மாணவச் செல்வங்களும் கேலிபேசி வருகின்றனர்.
ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், முதல் கட்டமாக, 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி (Spl. Session), நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனால் எந்த பயனும் இல்லை என்ற பிறகு, மீண்டும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை சிறப்புக் கூட்டத்தை (Spl. Session) கூட்டி, மீண்டும் நீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்
விரைவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை அறிந்து, மீண்டும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ள வாரிசு, நீட்டிற்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், அம்மாவின் அரசு நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து, ஆண்டுதோறும் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் கனவை நனவாக்கி உள்ளோம்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி, அப்பாவி மாணாக்கர்களின் ஆசையைத் தூண்டி, அவர்களின் உயிரைப் பறிக்கும் வேலையில்தான் இந்த விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதே தவிர, உருப்படியாக எதையும் செய்வதுபோல் தெரியவில்லை.
கொத்திய பாம்பே, விஷத்தை எடுப்பது போல
"கொத்திய பாம்பே, விஷத்தை எடுப்பது போல" இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட 26 கட்சிகளின் கூட்டணி, மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்று விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றத் தயாரா?
'இந்தியா' கூட்டணிக் கட்சிகளுடன் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கத் தயாரா ? அல்லது குறைந்தபட்சம் 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நீட்டிற்கு எதிராக கையெழுத்தாவது வாங்குவாரா ? என்று தமிழக மக்களிடமும், மாணவச் செல்வங்களிடமும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்.
வாயிலேயே வடை சுடுகிறது
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், பின்பும், வாயிலேயே வடை சுடுவதை வழக்கமாகக் கொண்ட விடியா திமுக அரசின் முதலமைச்சர், நீட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகள் அளித்து மாணவர்களை ஏமாற்றுவதைக் கைவிட வேண்டும். கொள்ளையடிப்பதற்காகவே பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு மந்திரி உதய(வா) நிதியும் தங்கள் இயலாமையை மறைக்க பல்வேறு ஓரங்க நாடகங்களை நடத்தி வருவது வெட்கக்கேடானது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....#உதயநிதிஎனும்உதவாநிதி pic.twitter.com/AWaLtLqGHu
— DJayakumar (@djayakumaroffcl) October 21, 2023
நீட் தேர்வு விவகாரத்தில் கோமாளி வேஷம் கட்டும் விளையாட்டு மந்திரி, உண்ணாவிரத நாடகத்தைத் தொடர்ந்து, தற்போது நீட்டுக்கு எதிராக மக்களிடம் நீட் விலக்கை வலியுறுத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்து, மீண்டும் தமிழக மக்களிடையே ஓரங்க நாடகம் ஒன்றை அரங்கேற்றப் பார்க்கிறார்.
நீட்டை விலக்க இந்த மகானுபாவர் யாரை வலியுறுத்தப் போகிறார் ? நீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த ஏமாற்றுக்கார அரசு தயக்கம் காட்டுவது ஏன்?இந்த கையாலாகாத தி.மு.க. ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி அப்பாவி மாணவ, மாணவிகள் உயிரைவிட்டதுதான் மிச்சம். தொடர்ந்து, மாணவர்களை வஞ்சிக்கும் உதய(வா) நிதியின் பொம்மலாட்ட ஜாலங்களை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.