உதயசூரியன் vs இரட்டை இலை vs தாமரை - வேலூரில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவரப்போவது யார்..?
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக - பாஜக காட்சிகள் நேரடி போட்டியில் உள்ளனர்.
வேலூர்மக்களவை தொகுதி
திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக தரப்பில் அரசு மருத்துவர் பசுபதி என்பவரும், பாஜக வேட்பாளராக ஏ.சி.சண்முகம் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதில் கதிர் ஆனந்த் தற்போதைய தொகுதி மக்களவை உறுப்பினர், ஏ.சி.சண்முகம் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளில் தான் அவர் கதிர் ஆனந்திடம் தோல்வியடைந்தார்.
2 முறை நழுவிய வெற்றி வாய்ப்பை இம்முறை வசப்படுத்திவிட வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தில் உள்ளார் அவர். இவர்களை எதிரித்து அரசியலுக்கு புதியவரான அரசு மருத்துவரை களமிறங்கியுள்ளது அதிமுக.
சிறுபான்மையினர் வாக்குகள்
வேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையின வாக்குகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகள் மிகவும் அதிகம்.திமுக தன்னை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என அடையாளப்படுத்தி கொள்ளும் நிலையில், தற்போது பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள அதிமுகவும் அவர்களின் வாக்குகளை குறிவைத்துள்ளது.
தனியார் நாளிதழிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ள பாஜகவின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்துக்கு இஸ்லாமியர்கள் கண்டிப்பாக வாக்களிக்க மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவத்து அவர்களின் அதில் 40% வாக்குகள் தனக்கே கிடைக்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்ற ரம்ஜான் பண்டிகைக்கு தான் 30 ஆயிரம் பேருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்துள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
திமுக அதிருப்தி வாக்குகளை அதிமுக - பாஜக கட்சிகள் பிரித்து கொள்ளும் என்று கூறினாலும், மக்கள் மத்தியில் பாஜக சிறுபான்மையின மக்களுக்கு விரோதமான கட்சி தான் என்ற கருத்து இன்னும் நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களும் அதனை தீவிரமாக பேசிவரும் நிலையில், அது பாஜகவிற்கு சவாலாக அமையலாம்.