அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - கி.வீரமணி தாக்கு

attack aiadmk Veeramani double
By Jon Mar 16, 2021 02:38 PM GMT
Report

சிறுபான்மையினர் ஓட்டுகளைப் பெறுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் கூறுகையில் 'நாங்கள் இது தொடர்பாக அதிமுகவிடம் கலந்தலோசிப்போம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மீதான எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுக தரப்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடியில் வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமியிடம் கேட்டபோது, 'நாங்கள் முன்னர் கூறியபடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற நிச்சயம் வலியுறுத்துவோம்.

வலியுறுத்தப்படும் என்றுதான் தெரிவித்துள்ளோம். சிறுபான்மையினரைப் பாதுக்காக்கக் கூடிய அரசு அம்மாவின் அரசு. அதன் வழியிலே சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் மத்தியில் வலியுறுத்துவோம்' என்றார். ''குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழகத்துக்குத் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு, அதற்காக மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்போம்'' என்று அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதிலளிக்கும்போது, 'வரும் சட்டப்பேரவைத் தேர்தல் அரசியல் போராட்டம் மட்டுமல்ல. சனாதானத்துக்கும், சமதர்மத்துக்கும் இடையேயான போராட்டம். சிறுபான்மையினர் ஓட்டுகளைப் பெறுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக ஓட்டு போடாமல் இருந்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வாறு கூறுகிறார்கள். ஆனால் யாரும் ஏமாறமாட்டார்கள். மக்கள் இவர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள்' என்று தெரிவித்துள்ளார்.