நிதி கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு - விசிக கண்டனம்
அரசியல் சுயநலத்துக்காக பாஜக அரசு நிதி கூட்டாட்சியை சிதைப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிதி பகிர்வு
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. இந்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு 31,962 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மொத்த தென் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியை விட உத்தரப்பிரதேசத்துக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த நிதியில் உத்தரப்பிரதேசம் மட்டும் 17.9 சதவீதம் அளித்துள்ளதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரவிக்குமார் கண்டனம்
இந்த நிதி பகிர்வு நிதி கூட்டாட்சியை சிதைப்பதாக விசிக பொதுச்செயலாளரும், எம்.பியுமான ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் 31962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 7268 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி கூட்டாட்சியை ( #Fiscal_Federalism ) சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு
— Dr D.Ravikumar (@WriterRavikumar) October 11, 2024
ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் 31962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.… pic.twitter.com/FpRZf9YTKS
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி 28152 கோடிதான். அதைவிட உத்தரப்பிரதேசம் என்ற ஒரு மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகமாகும். அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.