உயிருக்கு உயிரானவர் கணேசமூர்த்தி; எம்.பி சீட் கிடைக்காததால்..வைகோ கண்ணீர் மல்க பேட்டி!
எம்பி சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை நம்ப மாட்டேன் என வைகோ கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
எம்.பி கணேசமூர்த்தி
மதிமுகவின் பொருளாளராக பதவியில் இருந்த கணேசமூர்த்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த ஆண்டின் மக்களவை தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை
.
இந்நிலையில்,சென்ற வாரம் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவிற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
அப்போது அவர், “திமுக உறுப்பினராக வேண்டாவெறுப்பில் சேர்ந்து, மக்களவை உறுப்பினரானார் கணேசமூர்த்தி. இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறியவர் அவர். சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வைகோ பேட்டி
அப்போது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார்.தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம் நானும் கணேசமூர்த்தியும்” என்றார்.
மேலும், “கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாகவே மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர். இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்ததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட, மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
தொடர்ந்து பேசிய அவர், “மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. பலர் அவ்வாறு கூறிவருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன்” என்று வைகோ கூறியுள்ளார்.