லாப நட்டங்களை பார்க்காமல் திமுகவுடன் கூட்டணி; காரணம் இதுதான் - போட்டுடைத்த வைகோ
திமுகவுடனான கூட்டணி குறித்து வைகோ பேசியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்தார். அதுமுதல் 2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களை திமுக தலைமையில் மதிமுக சந்தித்துள்ளது.
இந்நிலையில் கூட்டணி குறித்து வைகோ கூறுகையில், இந்துத்வா கும்பல் வேரடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்கிறேன் என்றார். தொடர்ந்து மதிமுகவின் 32 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வரும் நிலையில் வைகோ தன் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது.
திமுகவுடன் கூட்டணி
தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது. இந்த சூழலில் 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும்.
அதேநேரம், கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்.20-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுவில் உணர்ச்சி பிரவாகமாக நிகழ்வுகள் நடந்தேறின. நீர் அடித்து நீர் விலகாது என்பதை கட்சியின் நிர்வாகக் குழு திட்டவட்டமாக பிரகடனம் செய்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வீடுகளில், நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்று விழாவை நடத்த வேண்டும். மேலும், நலத்திட்ட உதவி வழங்குதல், தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம் என சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் அனைத்து சார்பு அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.