கொரோனா தடுப்பூசி போட்ட 447 பேருக்கு பக்கவிளைவு: 3 பேர் மருத்துவமனையில்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.