ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா - கோரிக்கையை நிராகரித்த ஐ.நா!
ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வாக்களித்துள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு
கடந்த நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா போரை கைவிட்டதாக இல்லை.

இதற்கிடையில், உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து, இந்த நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்ட ரஷ்யா, இதுதொடர்பாக பொதுவாக்கெடுப்பையும் நடத்தியுள்ளது.
ரஷ்யா கோரிக்கை
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்தது. மொத்தம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 107 நாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. மீதமுள்ள 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்பு நடத்துவது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எதிராக இந்தியா
இதனை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போதும், இந்தியா உள்பட 100 நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன. இதையடுத்து, அல்பேனியா கொண்டு வந்த அந்த தீர்மானத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்யா கோரியது.
ஆனால், 16 நாடுகள் ஆதரவாகவும், 34 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்த நிலையில், பெரும்பாலான நாடுகள் மறுபரிசீலனைக்கு எதிராக வாக்களித்த காரணத்தால் மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என்று ஐ.நா., பொதுசபை முடிவு செய்து அறிவித்தது.