விஜய்க்கு பணக்கொழுப்பா? சீமானுக்கு யதார்த்தம் புரியவில்லை - தவெக பதிலடி
தவெகவிற்கு பணக்கொழுப்பு என மறைமுகமாக விமர்சித்த சீமானுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.
பிரசாந்த் கிஷோர்
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரசாந்த் கிஷோர், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா ஆகிய தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தவெகவில் உள்ளனர்.
சீமான்
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சமீபகாலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், அண்ணா போன்றவர்களெல்லாம் வியூக வகுப்பாளர்களை வைத்துத் தான் அரசியல் செய்தார்களா? தமிழ்நாட்டில் உள்ள பிரதான பிரச்சனைகள் குறித்து பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்.
என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை என வைத்துக்கொண்டு எது எது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத நான் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும். எந்த தொகுதியில், யாரை நிறுத்தினால் வெல்லலாம் என்று கூட தெரியாத நான் எதற்கு அரசியலில் ஈடுபட வேண்டும். எனக்கு நிறைய மூளை உள்ளது. அதனால் எனக்கு அது தேவையில்லை" என கூறினார்.
அரசியல் யதார்த்தம்
சீமானின் இந்த பேச்சுக்கு தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?
சீமானுடன் ஒத்துப்போகாது
திரள்நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.
ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே" என குறிப்பிட்டுள்ளார்.