தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - என்ன காரணம்?
தவெக தலைவர் விஜய்க்கு Y பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவுகள்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி உள்துறை அமைச்சகம் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் பாதுகாப்பு வழங்கும். இந்த பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+ என வேறுபடும். ஷாரூக்கான், சல்மான் கான் போன்ற பாலிவுட் நடிகர்கள் மற்றும் அம்பானி அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
X பிரிவு
இதில் X பிரிவு குறைந்த பட்ச பாதுகாப்பாகும். பாதுகாப்பு பெறும் நபருடன் 1 அல்லது 2 ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். இது பெரும்பாலும் மாநில காவல்துறை அல்லது பிற பாதுகாப்பு அமைப்புகளால் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
Y பிரிவு
இதற்கு அடுத்தாக Y பிரிவு பாதுகாப்பு. பாதுகாப்பு பெறும் நபருடன் 8 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். இவர்களில் 1அல்லது 2 கமாண்டோக்கள் இருப்பார்கள். Y+ பிரிவில் 11 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பார்கள். இதில் 2 முதல் 4 கமாண்டோக்கள் இருப்பார்கள்.
Z பிரிவு
Z பிரிவு பாதுகாப்பில் 22 பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள். (பொதுவாக CRPF அல்லது NSG வீரர்கள்) முழுநேர ஆயுதத்துடன் பாதுகாப்பு வழங்கப்படும். இதில் எஸ்கார்ட் வாகனமும் (Escort Vehicle) அடங்கும்.
Z+ பிரிவில் 55 பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள். இதில் 10 NSG கமாண்டோக்கள் இருப்பார்கள். சில மாநில முதலமைச்சர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
SPG பாதுகாப்பு
SPG(Special Protection Group ) பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும். முன்னாள் பிரதமர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இது வழங்கப்படும்.
விஜய்க்கு Y பிரிவு
தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 'Y' பிரிவில் 8 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவர். இவர்களில் 1அல்லது 2 கமாண்டோக்கள் இருப்பார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிவடைய உள்ள நிலையில் அதன் பின்னர் நடிப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தப்படுத்த மாநில அளவில் நடைபயணம் செய்ய முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி முதல்வரானார். அந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர், ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்டார். சமீபத்தில் பிரசாந்த் கிஷோர், விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். விஜய்யும் இதே பாணியை கையில் எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.