விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பாமக தான் - ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (13.07.2024) நடைபெற்றது.
ராமதாஸ்
முதல் சுற்று முதல் முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக சார்பில் போட்டியிட சி.அன்புமணி 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,261 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125-க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர்.
வாக்குக்கு பணம்
ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர்.
ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது. அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.
பாமக
இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் திமுகவின் தொண்டர் அணியினராகவே மாறி, திமுகவின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமின்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது திமுகவும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.
ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்துக்கும், பாமகவின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாமகவுக்கு தான் கிடைத்திருக்கிறது. எனக்கூறியுள்ளார்.