காதலை முறித்த பெண் - கல்லூரியில் வைத்தே மாணவர் எடுத்த விபரீத முடிவு
கல்லூரி காதல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அழகுமணிகண்டன்(20) திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
விடுதியில் தங்கிப் படித்து வந்த இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு, காதலைத் தொடர்ந்துள்ளனர்.
காதல் முறிவால் மன உளைச்சல்
இந்த நிலையில் திடீரென அழகுமணிகண்டனிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணிடம் அவர் கேட்ட போது, நம் காதலை முறித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அழகுமணிகண்டன் கல்லூரியில் உள்ள 3வது மாடிக்குசென்று கீழே குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த அழகுமணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுமணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.