விவசாய பேரணியில் வன்முறை: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமுல்
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்தனர். அமைதியாக தொடங்கிய இந்த பேரணி சில இடங்களில் வன்முறையானது. விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடியும் நடத்தினர்.
மேலும் இதையடுத்து, டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். இந்த நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் இல்லம், பிரதமர் மோடி இல்லம், நாடாளுமன்றம் வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளிலும், டெல்லியின் எல்லை மற்றும் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, எங்களுக்கும் சம்மந்தமில்லை என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை ஈடுபட்டுள்ளது. டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.