செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு - எகிறும் எதிர்பார்ப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
நேரில் ஆஜர்
இதனையடுத்து 2011-16 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் உள்ள எம்.பி எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.
செந்தில் பாலாஜி தரப்பில், நான் தற்போது அமைச்சராக இல்லை. வழக்கில் என்னுடைய எந்தவிதமான தலையீடும் இருக்காது என ஏற்கனவே உறுதியளித்து விட்டேன். ஒன்று. மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது கொடுத்த தீர்ப்பு தனக்கும் பொருந்தும். நான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர்.
இன்று தீர்ப்பு
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, அமைச்சராக இருந்தபோதே இந்த வழக்கில் பல்வேறு தலையீடுகளை செய்ய முயன்றார். மேலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் விசாரணையை தாமதப்படுத்தி இருக்கிறார்கள் என பல காரணங்கள் இருக்கிறது. எனவே ஜாமீன் தரக்கூடாது' என்றனர்.
இந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்களும், 'தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என தமிழக அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.