இன்று கிருஷ்ண ஜெயந்தி; எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? முழு விவரம்
தர்மத்தை காத்து அதர்மத்தை அழித்து சத்தியத்தை காப்பதற்காக மகா விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணாவதாரம்.
மகா விஷ்ணு அவதாரம் எடுத்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் விரதம் இருப்பது எப்படி?
கிருஷ்ண ஜெயந்தி நாளில் காலை முதல் உணவு, நீர் உட்பட எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கமான ஒன்று.
குறிப்பாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் நள்ளிரவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதங்கள் படைத்த பின்னர் தான் விரதத்தை முடித்து வருவது வழக்கம்.
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் பணிக்கு செல்வோர் ஆகியோர் திட ஆதாரத்தை எடுத்துக்கொள்ளாமல் திரவ ஆதாரத்தை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மேலும் விரதம் இருக்கும் போது உப்பு சேர்த்த உணவுகள், தானியங்கள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது.
கிருஷ்ணனை மனதார வணங்கி விரதம் இருக்கும் நீங்கள் அன்றைய நாளில் தங்களால் இயன்ற தான தர்மங்களில் ஈடுபட வேண்டும்.
குழந்தை வரம் கேட்போர் எடுக்கும் முக்கிய விரதங்களில் இந்த கிருஷ்ண ஜெயந்தி விரதமும் ஒன்று.
செய்ய வேண்டியது என்ன?
கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து வணங்க வேண்டும் அதிலும் குறிப்பாக துளசி அணிவிப்பது கூடுதல் சிறப்பு.
கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும்.
வீட்டின் நுழைவு வாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதிய செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் குட்டிக் கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.