மீண்டும் தலைதூக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை
முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.
இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் நிலவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.
சுகாதாரத்துறை அறிவுரை
சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி தொற்று அறிகுறி தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும். பொது இடங்களில் இருமும்போது கைக்குட்டைகளை வைத்து மறைத்து கொண்டு இரும வேண்டும். பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும். தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.