அடிப்படை உரிமையை காக்க கல்வியை பயன்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை உரிமையை காக்க மாணவர்கள் தங்களது கல்வியை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முதல் மாநிலம் தமிழ்நாடு
இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டப்படிப்பு உட்பட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. சட்டப்படிப்புக்கென தெற்காசியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைமிகு பல்கலைக்கழகம் இது.

அம்பேத்கரின் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு. அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர். சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும்.
சமூகத்தை படிக்க வேண்டும்
வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.
சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் கல்வியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil
இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை IBC Tamil