திருமண பத்திரிகை வழங்க அழைப்பு - நாங்குநேரி மாணவன் மீது மீண்டும் தாக்குதல்
நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சின்னதுரை தாக்குதல்
திருநெல்வேலி, நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2023ல் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அந்த மர்ம கும்பல் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர்.
தொடர்ந்து, சின்னதுரை கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், சின்னதுரை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள வசந்தம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
என்ன நடந்தது?
உடனே மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள, விசிகவை சேர்ந்த சஜன் பராஜ், என்ன நடந்தது எனக் கேட்டதற்கு சின்னத்துரை "இன்ஸ்டாகிராம் செயலியில் என்னோடு படித்த பழைய நண்பன் என ஒருவன் கூறினான்.
திருமண பத்திரிகை வழங்க வேண்டும் அதனால் இங்கே வா என்று அழைத்தான். அதனால் நான் வசந்தா நகர் சென்றேன். அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் யார் என்று தெரியாததால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்ப முற்பட்ட போது மேலும் அங்கே மறைந்திருந்த மூன்று பேர் என்னை சூழ்ந்து கொண்டு முள்கம்பால் அடித்தனர்.
கையில் அவர்கள் இரண்டு அரிவாளும் வைத்திருந்தனர். பக்கத்தில் இருந்த வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உதவி கேட்டேன். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, போலீஸ் வந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்." எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.