திருவள்ளூர் மாணவி மரணம்... உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல்!
மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் பெற்றோர் உடலை வாங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
மாணவி மரணம்
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலை வாங்க ஒப்புதல்
போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் நீடிப்பதால் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், மாவட்ட எஸ்.பி.கல்யாண், சரக செயலாளர் சத்ய பிரியா பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பெற்றோர் உடலை வாங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.