வீடு தேடி வருபவர்களுக்கு தங்க கட்டிகளை வாரி இறைக்கும் தங்க ராஜா தெரியுமா..?
தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தங்க கட்டிகளை இலவச வழங்கி அழகு பார்த்துள்ளார் அரசர் ஒருவர்.
மான்சா மூசா
ஆனால் அவர் இப்பொது வாழவில்லை. 14-ம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும், வாஸ்ட் மாலி என்ற நாட்டில் வாழ்ந்துள்ளார். இது வரை உலகில் வாழ்ந்த உலக பணக்காரர்களிலேயே அவர் தான் முதல் இடத்தில் தற்போதும் நீடிக்கிறார்.
வாஸ்ட் மாலி நாட்டை ஆண்ட பேரரசர் தான் "மான்சா மூசா". 1280-ம் ஆண்டு பிறந்த இவர் 1312-ம் ஆண்டு அந்நாட்டின் அரசராக முடி சூட்டிக் கொண்டார். அப்போதே மான்சா மூசாவின் சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.
வாரி இறைப்பது...
அவரின் ஆட்சிக்குட்பட்ட நாட்டின் எல்லை தற்போதைய ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினோ பாசோ வரை விரிவடைந்து இருந்துள்ளது. அவரின் முக்கிய வருமானம் தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி தான்.
தங்கத்தையும் உப்பையும் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார் "மான்சா மூசா". 1324-ம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு, மான்சா மூசா புனித பயணம் மேற்கொண்டது வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவருக்கு பெரும் புகழையும், பெயரையும் தேடித்தந்தது அவருடைய தாராள குணம் தான். தன்னை நேரில் சந்திக்க வருபவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ள மூசாவை அவரின் குடிமக்கள் அரசருக்கு எல்லாம் அரசர் என்று தான் அழைத்ததாக குறிப்பிடப்படுகிறது.