‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படாது - பின் வாங்கிய திரையரங்குகள்

Chennai
By Thahir May 07, 2023 07:50 AM GMT
Report

கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரவேற்பு குறைந்துள்ளதால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படாது என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

‘தி கேரளா ஸ்டோரி’  திரைப்படத்திற்கு எதிர்ப்பு 

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று முன்தினம் வெளியானது.

தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 32 ஆயிரம் பெண்களின் பின்னணியில் உள்ள நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பதாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது இந்த படத்திற்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

சென்னையில் 15 இடங்களில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின் வாங்கிய திரையரங்குகள் 

சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், சென்னையில் அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட 13 திரையரங்குகளில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது.

மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கான வரவேற்பு இல்லாததால் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் நேற்று திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன. மேலும் ஆன்லைன் டிக்கெட் முறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.