தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் 1,100 மாணவிகள் கல்வி கற்று வந்தனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 11-ந்தேதி 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் 36 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.