இந்த வருட ஐபிஎல் தொடரோடு தல தோனி ஓய்வு பெறுகிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த வருட ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவதாக பரவலாக பேசப்பட்டு வருவதற்கு அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரையில் உலக ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு மாபெரும் கிரிக்கெட் தொடராக அமைந்துள்ளது.
இந்த தொடரில் மிக முக்கியமான அனைவராலும் விரும்பக் கூடிய ஒரு அணி என்றால் அது சென்னை தான். இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த ஐபில் தொடரில் பங்கேற்று வரும் அணிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கேப்டன்களாவது மாறியுள்ளனர். ஆனால், சென்னை அணிக்கோ இந்த தொடர் தொடங்கியது முதல் தற்போது வரையில் கேப்டனாக தல டோனி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் 39 வயதான தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்குமா? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், ‘இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டிக்குரிய ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது தனிப்பட்ட கருத்து’ என்றார். ஏற்கனவே அவர் தோனி 2021-ம் ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் ஆடுவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
