தெலுங்கானாவும், புதுவையும் இனி எனது இரட்டைக் குழந்தைகள்: ஆளுநர் தமிழிசை பேட்டி

politics interview Soundararajan
By Jon Feb 18, 2021 01:47 PM GMT
Report

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ஏற்க தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜன் நேற்று புதுச்சேரி வருகை தந்துள்ளார். புதுவையின் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்புடன் வழியனுப்பு நிகழ்வு ராஜ்நிவாஸில் நேற்று மாலை நடைபெற்றது. டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா தலைமையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் கிரண்பேடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் விமானம் மூலம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று மாலை புதுச்சேரி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியதாவது - புதுச்சேரி மக்கள் என் மீது அன்பாக இருப்பார்கள். நான் அவர்கள் மீது அன்பாக இருப்பேன். தெலுங்கானாவில் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு அனுபவத்தை வைத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சிறப்பாக செயல்படுவேன்.

சுதந்திர போராட்ட வீரரான மகாகவி பாரதியார் வாழ்ந்த இம்மண்ணுக்கு வந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு அதிர்ஷ்டம். நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் தெலுங்கானாவையும், புதுச்சேரியையும் இரட்டை குழந்தைகள் போல பாவிப்பேன். தமிழ் பேசும் மாநிலத்துக்கு ஆளுநராக வந்தது மகிழ்ச்சி.