மகளுடன் வாழ ஆசைப்பட்ட மருமகன்.. பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் - மாமியார் வெறிச்செயல்!
மருமகன் மீது மாமியாரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன்
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வர்லு –அனுராதா தம்பதியின் மகள் காவ்யா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரைக் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பி.டெக் முடித்த கௌதம் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகக் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து காவ்யா, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியைச் சமாதானம் செய்து அழைத்துச் செல்ல கௌதம் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காவ்யாவின் குடும்பத்தினர் கௌதமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தனது மனைவியை அழைத்துச் செல்வதில் கௌதம் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவ்யாவின் அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர், கௌதம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பின்னர் வீட்டிற்குள் தள்ளி கதவைப் பூட்டியுள்ளனர்.
கொலை
உடலில் தீப்பற்றியதால் கதறித் துடித்த கௌதம், அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கௌதமை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கௌதமின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காவ்யா மற்றும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.