5வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி!
இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குழந்தை குட்டிகள் உள்பட குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27ந்தேதி) முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இவர்களுடன் கடந்த 29ந்தேதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முடிவு எட்டாத நிலையில், நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அதுவும் தோல்வி அடைந்த நிலையில், முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5 நாளாக தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்ககப்பட்டு மயக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.