மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் - வெடிக்கும் ஆர்ப்பாட்டம்
மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் செயல்
தெலுங்கானா, தந்தூர் தொகுதியில், அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காசீம்.
இந்நிலையில் இவர் இங்கு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனித மூளை குறித்து பாடம் எடுக்க, கையில் மாட்டு மூளையுடன் வந்துள்ளார். இதனைப் பார்த்த வகுப்பில் இருந்த சில மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இடைநீக்கம்
பின் இதுதொடர்பான ஃபோட்டோஸ் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவினரும், இந்து அமைப்பினரும், அந்தப் பள்ளியின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அறிவியல் ஆசிரியரை இடைநீக்கம் செய்ய வேண்டும், எப்படி கல்வி நிலையத்திற்குள் இதுபோல் செயல்படலாம்.
பாடம் கற்பிக்க 3டி தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கும்போது, இதனை எப்படி அனுமதிக்கலாம் என ஆக்ரோஷம் தெரிவித்துள்ளனர். இதில் மத உணர்வுகள் இருப்பதாகவும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து செல்ல வைத்தனர்.
தொடர்ந்து அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.