மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது, தோல்வியை தவிர்க்க மத வெறுப்பு - முதல்வர் காட்டம்!
தனது தோல்வியை தவிர்ப்பதற்காக பிரதமர் மோடி மத உணர்வை தூண்டிவிட்டு வெறுப்புப் பேச்சுகளை நாடியிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மோடிய நச்சுப் பேச்சு
ராஜாதான் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்? சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை.
ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் காட்டம்
இந்த நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து மோடியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமருக்கு கண்டனம அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரதமர் மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானதாகவும், மிகவும் வருந்தத்தக்கத்துமாக இருந்ததாகவும், மக்களின் கோபம் மற்றும் தனது தோல்வியை தவிர்ப்பதற்காக பிரதமர் மோடி மத உணர்வை தூண்டிவிட்டு வெறுப்புப் பேச்சுகளை நாடியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெறுப்பும், பாகுபாடும் மட்டுமே மோடியின் உண்மையான கியாரண்டி என்றும் முதல்வர் சாடியுள்ளார். பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. சிறிதளவும் கூச்சமின்றி நடுநிலைமையைக் கூட தேர்தல் ஆணையம் கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சமுத்துவ சமூகத்தை உருவாக்க இந்தியா கூட்டணி அறிவித்திருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு தீர்வாக அமையும் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் இதை திரித்து, சமூகரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் உரிமையை மறுப்பது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.