யாருக்கும் அதிகாரம் இல்லை, எதுவாக இருந்தாலும் நான் தான் முடிவு செய்வேன் - முதலமைச்சர் கடிதம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்குத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வழியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
அவர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. பின்னர் திமுகவினர் அமைச்சரை தன்னிச்சயாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
கடிதம்
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "எனது அமைச்சரவையில் யாரையும் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு (ஆளுநருக்கு) இல்லை. சட்ட ஆலோசனை கூட பெறாமல் முக்கிய முடிவை எடுத்துள்ளதிலிருந்தே தெரிகிறது.
மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக இருக்கிறது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரை நீக்க பிரதமர் அல்லது முதல்வருக்கே அதிகாரம் உள்ளது.
அமைச்சர்களாக யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை நான் தான் முடிவு செய்வேன். வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய பிறகு தான் அமைச்சர் பதவியில் தொடரும் வாய்ப்பை இழப்பார்.
முதல்வரின் பரிந்துரைப்படியே அமைச்சர்களை சேர்க்கவும் நீக்கவும் ஆளுநரால் முடியும் என சட்டம் கூறுகிறது. என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல். தமிழக கலாச்சாரத்தின் படி ஆளுநருக்கு உரிய மரியாதை அரசு வழங்கி வருகிறது. மரியாதை தருவதால் அரசமைப்புச் சட்டத்தை மீறி நடவடிக்கைக்கு அடிபணிய வேண்டும் என்பதில்லை'' என்று கூறியுள்ளார்.