தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
2021 புத்தாண்டு தின வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருபதாவது: 'புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்திடவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார். அவரது வழியை பின்பற்றி தமிழக அரசும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், வேளாண்மை, நீர் மேலாண்மை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், எரிசக்தி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சமூக நலன் போன்ற அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல படைத்து, மத்திய அரசின் விருதுகளை தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வருகிறது. மக்களின் நல்வாழ்விற்காக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.
அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 31, 2020
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். #NewYear2021 pic.twitter.com/volWKCc0g0
மேலும் இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: 'கடந்த கால இருள் நீங்கும்; கதிரொளி பரவும்; மக்களின் கவலைகளைத் துடைத்திடவல்ல, காக்கும் கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும்; தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன். இருளை விரட்டும் உதய சூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம் தமிழர் திருநாளாம் நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போலத் தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் 'சமத்துவப் பொங்கல்' விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இருள் நீங்கும்; கதிரொளி பரவும்! மக்களின் கவலைகளைத் துடைத்திட நல்லாட்சி மலரும்! உறுதியான நம்பிக்கையுடன் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 31, 2020
நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நன்னெறியில் நாளும் உழைத்திட திமுக தயாராக இருக்கிறது.
அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!#HappyNewYear2021 pic.twitter.com/3RcR6XwSDW