புதுவை ஆளுநராக முதல் நாளிலே தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி - பெரும்பான்மையை நிருபிக்க நாராயணசாமிக்கு உத்தரவு
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் இன்று புதுச்சேரி ஆளுநராகப் பொறுப்பேற்று கொண்டார். கிரண் பேடி அவசர அவசரமாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் இடத்தில் நியமிக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
புதுச்சேரி அரசியலில் ஏற்கனவே பரபரப்பு காணப்பட்டது. நாராணயசாமி அரசுக்கும் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கல் நால்வர் பதவி விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 14 ஆக குறைந்தது.
இந்நிலையில் நாராணயசாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டு வந்தது. நாராணயசாமி அமைச்சரவை பதவி விலகப்போவதாகவும் செய்திகள் நிலவின.
ஆனால் ராஜினாமா செய்யப்போவதில்லை என நாராணயசாமி தெரிவித்திருந்தார். தற்போது புதிய ஆளுநரை முதல்வர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்தார். எதிர்க்கட்சிகளும் ஆளுநரைச் சந்தித்திருந்தனர்.
இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிருபிக்க தமிழிசை சவுந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பதவியேற்ற முதல் நாளிலே இந்த உத்தரவு புதிய திருப்பமாக அமைந்துள்ளது.