விஜய் இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும் - தமிழிசை விமர்சனம்
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும் என தமிழிசை பேசியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
சென்னையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது விஜய்யின் மாநாடு மற்றும் படம் குறித்து பேசிய அவர், "இதற்கு முன்னால் கடைசி படம் என்றுதான் சொன்னார். அதன்பிறகு இப்போது ஒரு படம். எத்தனை கடைசிப் படம் என்று தெரியவில்லை. இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் என பேசினார்.
தலைவர்களை மதிக்க வேண்டும்
தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'மற்ற கட்சிகளை போல நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, பல மாநிலங்களை ஆளும் கட்சிகள், பல ஆண்டுகளாக பல கொள்கைகளை கொண்ட கட்சிகள் நாட்டில் இருக்கிறது.
விஜய் அவரது கட்சியை உயர்வாக சொல்லலாம். ஆனால், மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் எனச் சொல்லுவதற்கு விஜய் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டார் என்பது தெரியவில்லை. விஜய் மற்ற அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும்.
குட்டி திராவிட மாடல்
திமுகவினர் பெரியாரை கும்பிடுவார்கள், ஆனால் எங்களை விட அதிகமாக நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள். பெரியாரையும் வணங்கி, அதே நேரத்தில் மறைமுகமாக கடவுளையும் வணங்கி விஜய் திமுகவை சரியாக பின்பற்றுகிறார்.
உங்கள் கொள்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரட்டை வேடம் போட வேண்டாம் என ஆரம்பம் முதல் சொல்லி வருகிறோம். திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்.
சினிமாவுக்கு வருவது போல, விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கூடி விடும் அதில் சந்தேகம் இல்லை. மாநாட்டை விஜய் நடத்திக் காண்பித்துவிடுவார். ஆனால், கட்சியை எப்படி நடத்திக் காண்பிப்பார் என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேலையை விட்டுவிட்டு மாநாட்டுக்கு வாருங்கள் என்று கூறுவதெல்லாம் சரியான அறிவுரை அல்ல" என பேசியுள்ளார்.