விஜய் சாயம் வெளுக்குமா என பார்ப்போம் - தமிழிசை விமர்சனம்
சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் சிறுத்துப் போய் விட்டார் என தமிழிசை பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இதன் பின் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருமாவளவன்
அப்போது பேசிய அவர், சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் விட்டார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டுவிட்டு பின் நான் போடவில்லை அட்மின் தான் போட்டார் என சினிமா போல நாடகத்தை நடத்தி வருகிறார்.
திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள் தான் ஸ்பான்சர்களாக இருக்கிறார்கள். அந்த மாநாடு தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
விஜய்
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பாரென நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்படித்தான் என காட்டிவிட்டார். திமுக பாதையில் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார். சாயம் வெளுகிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா என்பது போகப் போக தான் தெரியும்.
விஜய்யின் திரைப்படத்தை திரையிட அனுமதி மறுக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த தடை போடுகிறார்கள். தேசியத்தின் பக்கம் வந்தாலாவது பரந்த மனப்பான்மையுடன் ஆதரவு தருவோம். ஆனால், விஜய் திராவிட சாயத்தை பூசி விட்டார் அவ்வளவு தான் என பேசினார்.