திருமாவளவன் இப்படி தரம் தாழ்ந்து பேசுவார் என நினைக்கவில்லை - தமிழிசை விமர்சனம்
திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் இந்த பேச்சு ஒரு கரும்புள்ளி என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று(2.10.2024) மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள செல்லும் முன் விசிக தலைவர் திருமாவளவன், காமராஜர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
இதற்கிடையே, “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்தார்.
திருமாவளவன் பேச்சு
விசிகவின் மாநாட்டில் பேசிய திருமாவளவன், “நேரமின்மை காரணமாக காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாததால் காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று தமிழிசை சொல்வதாகத் தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரைப் போல் எனக்கும் அந்தப் பழக்கம் கிடையாது” என பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "இதுவரை மதுவிலக்கு கொள்கையை விசிக எடுத்து வரவில்லை, தற்போது அரசியல் சார்ந்து சுய நலத்திற்காக மதுவிலக்கு பற்றி பேசுகிறீர்களே என்ற அர்த்தத்தில்தான் நான் பேசினேன்.
தமிழிசை பதிலடி
திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மேலும் பாட்டிலை திறக்கிறார் என்று நான் சொல்லவில்லை, அவர்தான் பேசினார். தன் தொண்டர்களுக்கு திருப்பி அடி என்று கற்றுக் கொடுத்ததும் அவர்தான்.
எனது 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த தனிநபர் தாக்குதலையும் நடத்தியதே கிடையாது.நாகரீகமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்னை போன்றவர் மீது மோசமான தாக்குதலை திருமாவளவன் நிகழ்த்தியுள்ளார்.
திருமாவளவன் நாகரீகமான அரசியல்வாதி என நினைத்துக் கொண்டு இருந்தேன். அவரிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இது திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி" என பேசினார்.