மது ஒழிப்பு மாநாடு - 12 தீர்மானங்களை நிறைவேற்றிய திருமாவளவன்
Thol. Thirumavalavan
By Karthikraja
விசிக சார்பில் நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மது ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் சார்பில் வாசுகி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முத்துலட்சுமி வீரப்பன், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
மாநாட்டிற்கு தலைமை தாங்கிய திருமாவளவன் 12 தீர்மானங்களை வாசித்தார். அந்த தீர்மானங்கள் பின்வருமாறு,
- அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்.
- மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்.
- மதுவிலக்கினால் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு கூடுதல் நிதியளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுவால் மனித வளம் பாதிக்கப்படுவதால் மதுவிலக்கு விசாரணை ஆணையம் கொண்டு வர வேண்டும்.
- தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.
- தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
- மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
- குடி நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மையங்களை அரசு அமைக்க வேண்டும்.
- மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.
- டாஸ்மாக் மதுவிற்பனை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- மதுவிலக்குப் பரப்பு இயக்கத்தில் அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்.