தமிழ்நாட்டில் 7000 பெட்ரோல் பங்க் மூடப்படும் நிலை... காரணம் என்ன?
தூத்துக்குடியில் பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்கியதை கண்டித்து, ஒருநாள் மட்டும் 7000 பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் நிலைய ஊழியர் தாக்குதல்
தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும், பெட்ரோல் நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும் ஒருநாள் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கூறுகையில், தூத்துக்குடி பெட்ரோல் நிலையம் ஒன்றில் மேலாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்த நிலையில், 4 பேர் பெட்ரோல் போடுவதற்காக பங்கிக்கு வந்துள்ளனர்.

வந்தவர்கள் அந்த நிலையத்திற்குள் சிறுநீர் கழித்ததையடுத்து, குறித்த பெண் மேலாளர் கழிவறையை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் குறித்த ஊழியரை கீழே தள்ளிவிட்டு அவர் மீதும் சிறுநீர் கழித்துள்ளனர்.
பின்பு சமாதானப்படுத்தி அனுப்பப்பட்ட நபர்கள் இந்த பிரச்சனையை விடாமல் மீண்டும் 10 பேருடன் கும்பலாக வந்துள்ளனர். கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து ஊழியர்களை தாக்க முற்பட்டதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
7000 பெட்ரோல் பங்க் மூடல்
இந்நிலையில் குறித்த நபர்கள் போதைபொருள் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்று கூறப்படுவதுடன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தமிழகத்தில் 7000 பெட்ரோல் பங்க் ஒருநாள் விற்பனை நிறுத்தப்பட்டு அனைவருக்கும் இந்த விடயம் தெரியும்படி செய்யப்படும் என்றும், பெட்ரோல் பங்க் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உத்ரவாதம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதாவது அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே தங்களது முடிவு மாற்றப்படும் என்று பெட்ரோல் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.
