கேப்டனாக சூர்யகுமார்; ஓரங்கட்டப்பட்ட பாண்ட்யா - கம்பீர் கொடுத்த அழுத்தம்..?
இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ்
நடந்து முடிந்த 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாமியின் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட போட்டிகளில் மூவரும் தொடர்ந்து விளையாடவுள்ளனர். இதனால், இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனாவார் என்ற பேச்சுகள் எழுந்தது.
இதனிடையே இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற நாளிலேயே சூர்யகுமார் யாதவின் பெயரை டி20 கேப்டனாக பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. ஆனால், ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வேண்டும் என்று பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் கூறிவந்தனர்.
ஹர்திக் பாண்ட்யா
இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் சுப்மன் கில் என பிசிசிஐ அறிவித்தது.
அந்த அணியில் ஹர்திக் பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார். இதற்கு கம்பீரின் அழுத்தம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், இந்திய அணி வீரர்களும் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் தங்களுக்கு அதிக ஃப்ரீடம் கொடுத்ததாக இளம் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டனாக தேர்வு செய்யாததற்கு அவரது உடல் நிலை பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படாதது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.