அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க 'ரிமோட் ஓட்டிங்' அறிமுகம் செய்ய திட்டம் - சுனில் அரோரா
அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க 'ரிமோட் ஓட்டிங்' முறையை கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது - தேர்தலில் வாக்களிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ஆய்வு செய்து வந்து கொண்டிருக்கிறோம். 'ரிமோட் ஓட்டிங்' எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின் போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரிடையாக போகாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த சோதனை முயற்சி இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்க இருக்கிறது. லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டு போட இயலும். தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, வாக்களிக்க வேண்டும்.
அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.