அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.., மருத்துவரின் அறிவுரை
சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
மே மாதம் வருவதற்கு முன்பே கடும் வெப்பம் நிலவுகின்ற நிலையில், வரும் நாட்களில் மேலும் சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.
கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக உடலில் நீர்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததே முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் கவிதா, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கோடைகாலத்தில் சின்னம்மை, வெப்பவாதம், தோல் நோய்கள் போன்றவை அதிகமாக காணப்படுகின்றன என்றார்.
அதிக வெப்பத்தால் உடலில் வெப்பவாதம் ஏற்பட்டு மயக்கம், உடல் செயலிழப்பு போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.
மேலும் சின்னம்மை போன்ற வைரஸ் நோய்கள் வெப்பத்தில் பரவ வாய்ப்புள்ளது. இதனால் உடலில் அரிப்பு மற்றும் கரும்புள்ளிகள் தோன்றி பின்னர் தழும்பாக மாறும்.
கோடையில் கண் எரிச்சல், கண் நீர்வருதல், கண் வலி போன்ற பிரச்சனைகளும் அதிகமாக காணப்படுகின்றன.

மேலும், அதிக வியர்வை காரணமாக வியர்குரு மற்றும் தோல் அலர்ஜி ஏற்படும் அபாயமும் உள்ளது.
அந்தவகையில், வெளியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் 3- 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
அதேபோல், தர்பூசணி போன்ற நீர் நிறைந்த பழங்களை சாப்பிடுவது உடலை குளிர்விக்க உதவும்.
வெளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கை, கால்களை நன்றாக கழுவுவது வைரஸ் நோய்களைத் தடுக்கும்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.