தாக்குதலுக்கு உள்ளான சக்தி மெட்ரிக் பள்ளியின் குரூப்-4 தேர்வு மையம் மாற்றம்..!
ஸ்ரீமதி தற்கொலை வழக்கு
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணை
மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்
சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் ஆய்வு செய்து, வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 1200 பேருக்கு குருப்-4 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சக்தி பள்ளி தேர்வு மையத்திற்கு பதிலாக கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.